திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Thursday, August 18, 2011

லைலத்துல் கத்ர்

'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)
என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் அறிவோம்.
'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)

'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்' (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)

மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்.
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.
'ரமளானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.' (அறிவிப்பவர்: அபூஸலமா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).

மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள்.
லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவில் என்ன சொல்ல வேண்டும் என்று நான் கேட்டதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா அல்லாஹ்! நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

 பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

'நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)

'அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.

'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

'நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்'. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.
பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்பட்டவை
'நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

'நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

'நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.' (அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.
பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
'நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி)
'இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

No comments: