திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Friday, August 19, 2011

லைலத்துல் கத்ரின் சிறப்பு


புனித மிக்க ரமளான் மாதத்தில் இரவுத் தொழுகையை தொழுதால் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கியதை அறிவோம். ரமளான் மாதத்தில் ஒருநாள் இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது என்றும் அல்லாஹ் அருள்மறையாம் குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான். 
1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)க் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். 
2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? 
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். 
4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். 
5. சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1,2,3,4,5)  
இந்த இரவில் தான் இறைவனின் அருள்மறையாம் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ளது என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.  'நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கியருளினோம்';. (44:3) 
கண்ணியமுள்ள ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் வர்ணிக்கிறான். இம்மகிமைமிக்க இரவில் தொழுவது பற்றி பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கினார்கள். 
(1) 'யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ 
ஆயிரம் மாதங்களைவிட சிறந்த நாளாக லைலத்துல் கத்ர் திகழ்கிறது. அதில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மற்றும் வானவர்களும் வருகை தருவார்கள் என்று குர்ஆன் பறைசாற்றுகிறது. 
இப்புனித நாளின் இரவில் நின்று தொழுதால் தொழுதவரின் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஆசைப்படுவான் என்பதில் ஐயமில்லை, அது எந்த நாள் என்பதில் தான் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் அது இருபத்தி ஏழு என்று முடிவு செய்து இதுதான் லைலத்துல் கத்ர் என்று தத்துவார்த்தம் பேசி மற்ற நாட்களில் ஈடுபடாத அளவு அந்நாளில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கடைவீதிகளில் அலங்கார பொருட்களை வாங்குவதில் முயற்சிப்பார்கள். 
ஆனால் நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு நாளையும் குறிப்பிட்டு கூறவில்லை. லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமானால்  ரமளானின் கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 
(2) அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம்;. அப்போது நபி(ஸல்) அவர்கள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 
''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் 
மேலும் லைலத்துல் கத்ரை கடைசி ஏழு நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். 
(3) நபித்தோழர்களில் சிலருக்கு (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது நபி(ஸல) அவர்கள் ''உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் ஒத்து இருப்பதாக காண்கிறேன். ஆகவே அதை தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதை தேடட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் 
பெருமானார்(ஸல்) அவர்கள் கடைசி பத்து நாட்கள் அல்லது கடைசி ஏழு நாட்கள் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளதை காண்கிறோம். அதே போல் கடைசிப்பத்தின் சில நாட்களை சுட்டிக்காட்டி இந்நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளார்கள். 
(4) ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள். லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 

No comments: